புதிய அமைச்சரவை நியமனத்தின் போது முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதும், அது – கிடைக்கவில்லை.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் தொடர்புபட்டார் என்கிற குற்றச்சாட்டினை அடுத்து, தான் வகித்து வந்த அமைச்சர் பதவியை ரவி ராஜிநாமா செய்திருந்தார்.
அதேவேளை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படும் என்று முன்பு இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போதே கூறப்பட்டது. ஆயினும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், இன்றைய தினம் சரத் பொன்சேகாவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. ஆனால், இன்றும் வழங்கப்படவில்லை.
ஆனால், நிலையான அபிவிருத்தி, வனஜீரராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி பொன்சேகாவுக்குக் கிடைத்துள்ளது.
இருந்தபோதும், அரசாங்கத்தின் உள்ளிருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சித்தார் எனும் குற்றச்சாட்டு எழுந்தமையினை அடுத்து, தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்திருந்த விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு இன்றைய தினம் உயர் கல்வி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் பார்த்தால், ரவி கருணாநாயக்கவுக்கு ஏமாற்றத்தையும், சரத் பொன்சேகாவுக்கு அதிருப்தியையும் இன்றைய அமைச்சரவை நியமனம் கொடுத்துள்ளதாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.



