ஆடை உற்பத்தித் துறைக்கு, டிஜிட்டல் உதவி தேவைப்படுகிறது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

🕔 March 15, 2018

“உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்சத் தரத்தில் உள்ளன. இத்துறையானது கடந்த ஆண்டில் மிகப்பெரிய ஏற்றுமதி வருவாயை பெற்றுத் தந்துள்ளது. தற்போது இத்துறைக்கு டிஜிட்டல் மயமாக்கல் உதவி தேவைப்படுகின்றது” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டு சிரேஷ்ட கொள்கை வகுப்பாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் தொழில்மயமாக்கல்’ தொடர்பான செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த வாரம் கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் இடம்பெற்ற, உயர் மட்டளவிலான இரண்டு நாள் கொண்ட செயலமர்வின் ஆரம்ப அமர்வில், வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோனாலி விஜயரட்ன, வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டு சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் டொக்டர் ரஷ்மி பாங்கா, உலக வர்த்தக அமைப்பு ஆய்வு மைய ஆராய்ச்சியாளர் டொக்டர் அபிஜித் தாஸ் மற்றும் தெற்காசியா, ஆசியா நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுளின் சிரேஷ்ட கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வர்த்தக செயலாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இவ்ஆரம்ப அமர்வில் அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

“டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் இலங்கை பல சவால்களை எதிர்கொள்கிறது. இவை டிஜிட்டல் திறன்களின் மெதுவான வளர்ச்சியை கொண்டிருக்ககின்றது. மற்றும் எமது ஆடைகள் உட்பட ஏற்றுமதிப் பிரிவுகளை வெற்றிகரமான டிஜிட்டல் இலக்காக்க வேண்டும். இலங்கையின் சர்வதேச வர்த்தக அபிவிருத்தியில் தொழில்துறையையும் உற்பத்தித்துறையும் பாரிய பங்களிப்பினைச் செய்கின்றன.

எங்கள் ஆடை உற்பத்தித் துறையானது பெரிய ஏற்றுமதியைக் கொண்டுள்ளது. உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்ச தரத்தில் உள்ளன. இத்துறையானது கடந்த ஆண்டில் வரலாற்றில் மிகப்பெரிய ஏற்றுமதி வருவாயைப் பெற்றுத் தந்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் 03 சதவீத அதிகரிப்புடன் 4.8 பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டித்தந்துள்ளது. இத்துறையின் முன்னேற்றத்துக்கு டிஜிட்டல் ஆதரவு தேவை.

இலங்கை கைத்தொழில்துறையில் முன்னணி வகிப்பது ஆடைத்தொழிலாகும். திறந்த பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின், ஆடை தொடர்பாக இலங்கை பிரதான நாடாகியது. இலங்கையின் ஆடைகள் தரமானதால் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. கடந்த  தசாப்தங்களில் இலங்கையின் ஆடைகளுக்கு ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் பெரும் கேள்வி காணப்பட்டது.

 2016 ஆம் ஆண்டை விடவும், கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் (2017) எமது ஆடைகள் வருமானம் அதிகரித்துள்ளது” என்றார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்