வாக்களிப்பதற்காக விசேட தேவையுடையோர், உதவியாளரைப் பெற்றுக் கொள்ள முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழு
எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில், பார்வையிழந்தவர்கள் உள்ளிட்ட விசேட தேவையுடையவர்கள் வாக்களிக்கும் பொருட்டு, மற்றொருவரின் உதவியினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உதவி வழங்குகின்றவர் வேட்பாளராகவோ அல்லது கட்சிகள் சார்ந்த வாக்களிப்பு நிலைய முகவராகவே இருக்கக் கூடாது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும், உதவியளிப்பவர் 18 வயதை நிறைவு செய்தவராகவும் இருத்தல் வேண்டும்.
விசேட தேவையுடைய ஒருவர் – தனக்கான உதவியாளரைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க வேண்டுமென்றும், அதற்கான விண்ணப்பப் படிவத்தினை கிராம சேவகரிடம் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்தும், விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.