இலங்கையில் வக்பு சபை என்பது ஓர் அரசியல் முகவர் என்பதை, சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாக கலைப்பு சந்தேகமற நிரூபித்துள்ளதாக, காத்தான்குடி நகரசபைக்கான தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி சார்பாக போட்டியிடும் முஜீப் இப்றாகிம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
அரசாங்கங்கள் மாறுகிற போது, வக்பு சபை அங்கத்தவர்களும் மாறுகிறார்கள். அதாவது ஆளுந்தரப்பு அரசியல்காரர்களின் சிபாரிசின் பெயரில்தான் வக்பு சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
தேர்தல் ஆணையாளரை பயன்படுத்தி சாய்ந்தமருது பள்ளிவாசல் நம்பிக்கை பொறுப்பாளர் சபையினை கலைக்க ஹகீம் முயற்சி எடுத்தார். அது தோல்வியில் முடிய, வக்பு சபையினை அதற்காக பாவித்திருக்கிறார்.
இது ஒரு எளிய வேலையாகும்.
ஜனநாயக பரப்பில் சாய்ந்தமருது மக்கள் தமது உணர்வுகளை ஒருமித்து வெளிக்காட்ட எடுக்கும் போராட்டத்தை, இந்த நடவடிக்கை ஒரு போதும் முடக்கிவிடாது. மாறாக அது இன்னும் வீறுகொண்டு எழும்.



