அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ள அமைச்சர்கள், பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு
அரசாங்கத்திலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ள ஏழு பேர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கம்பஹாவில் ரகசியமாகச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது.
இவ்வாறு ரகசிய சந்திப்பில் ஈடுபட்டவர்களில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 05 அமைச்சர்களும், 02 பிரதியமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர் எனக் கூறப்படுகிறது.
இச்சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி 07 பேரும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கடந்த செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சந்தித்து கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.
தாங்கள் ஏழுபேரும், செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்திலிருந்து விலகபோவதாகவும், அதற்கான காரணங்களையும் இந்தச் சந்திப்புகளின்போது சம்பந்தப்பட்டவர்கள் தெளிவுப்படுத்தியதாக அறியமுடிகின்றது.
அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்புவதற்கு, குறித்த ஏழுபேரும் தீர்மானித்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தை தயாரிப்பது தொடர்பிலும் இந்தச் சந்திப்பின் போது, கலந்துரையாடப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.
ஜனாதிபதிக்கு, கடிதத்தை அனுப்பி வைத்ததன் பின்னர், ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு, அந்த ஏழுபேரும் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.