கல்முனையில் அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்’ அமைக்க ஜனாதிபதி உத்தரவு: 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிப்பு

🕔 May 15, 2024

முஸ்லிம் மக்களுக்காக இந்த நாட்டில் அளப்பரிய சேவைகளையாற்றிய தலைசிறந்த அரசியல்வாதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கு அமைவாக ‘அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்’ ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எம்.எச்.எம். அஷ்ரபின் 24ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு – திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க, எம்.எச்.எம்.அஷ்ரபின் பிறந்த ஊரான கல்முனையில் இந்த நினைவு அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட உள்ளது எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதற்கான நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

‘திறமையான சட்டத்தரணியும் சிறந்த சட்டமியற்றுபவருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப், புகழ்பெற்ற அரசியல்வாதி என்பதோடு அவர் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்காக பெரும் பணியாற்றியுள்ளார்’.

‘முன்மாதிரியான மற்றும் மனிதாபிமானம் நிறைந்த மக்கள் பிரதிநிதியான அவர் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே மிகவும் மதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது’ எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்திருக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்