புதிய அரசியல் யாப்பு தொடர்பில், மகாநாயக்கர்களின் யோசனை பெறப்படும்: ஜனாதிபதி உத்தரவாதம்
புதிய அரசியலமைப்பு தொடர்பில் பௌத்த மகாநாயக்கர்களின் கருத்துக்கள் பெறப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பௌத்த மாநாயக்க தேரர்கள் உட்பட மகா சங்க சபையினரை கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி சந்தித்தார். இதன்போதே மேற்படி விடயத்தினை அவர் கூறினார்.
இதேவேளை, புதிய அரசியலமைப்பு தொடர்பில், இறுதி ஆவணங்கள் எவையும் இதுவரை தயாரிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
“புதிய அரசியலமைப்பு தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயினும், அரசாங்கம் அவ்வாறான வரைவு ஒன்றை தயாரிக்குமாயின், அது நாட்டின் எதிர்காலம் மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து ஆழமாக ஆராய்ந்து மேற்கொள்ளப்படும்” என, ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதன்போது, மாநாயக்க தேரர்களும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்ததோடு, அது சம்பந்தமான யோசனைகள் அடங்கிய ஆவணமொன்றினையும் ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில், மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர், அஸ்கிரிய மாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் மற்றும் ரமஞ்ஞைய பீடத்தின் மாநாயக்கர் நபான பேசிறி தேரர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.