அரசியின் உச்ச விலை வெளியீடு; மேலதிகமாக விற்போருக்கு எதிராக நடவடிக்கை: அமைச்சர் றிசாத்
கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர், றிஸாட் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை அரிசிக்கான உச்ச சில்லறை விலைகளை வர்த்தமானியில் உடனடியாக பிரசுரிக்கும் படி கட்டளை பிறப்பித்துள்ளார்.
அதன் பிரகாரம் வர்த்தமானியில் நேற்று நள்ளிரவு பிரசுரிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான உச்ச சில்லறை விலைகள் பின்வருமாறு;
– இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி — கிலோ ரூபா 72/= (மாற்றமில்லை)
– உள்நாட்டு உற்பத்தி நாட்டரிசி — கிலோ ரூபா 80/=
– இறக்குமதி செய்யப்பட்ட பச்சை அரிசி — கெக்குலு கிலோ ரூபா 70/= (மாற்றமில்லை)
– உள்நாட்டு உற்பத்தி பச்சை அரிசி — கெக்குலு கிலோ ரூபா 78/=
– இறக்குமதி செய்யப்பட்ட சம்பா — (கீரி மற்றும் சூதுரு சம்பா தவிர்ந்தவை) கிலோ ரூபா 80/= (மாற்றமில்லை)
– உள்நாட்டு உற்பத்தி சம்பா — (கீரி மற்றும் சூதுரு சம்பா தவிர்ந்தவை) கிலோ ரூபா 90/=
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;
“மேலதிகமாக அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அரிசி தட்டுப்பாடு என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விட்டது. கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமாக அரிசி விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள் பற்றி முறைப்பாட்டை செய்ய விஷேடமாக தொலைபேசி இலக்கம் 1977 ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றும் நாட்டிலுள்ள அரிசி விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபார நிலையங்களை கண்காணிக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் 250 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.