வடக்கு முதலமைச்சர் பொய் சொல்கிறார்: வட மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் குற்றச்சாட்டு

🕔 December 23, 2016

janoofer-01– சுஐப் எம் காசிம் –

வடமாகாணசபை முஸ்லிம்களுக்கு  அநீதி இழைக்கவில்லை எனவும், அவர்களை அரவணைத்தே செல்வதாகவும், மாகாணசபை பதவியேற்றதன் பின்னர் இற்றை வரை 3000 முஸ்லிம் மக்களுக்கு காணிகளை வழங்கியிருப்பதாகவும் முதலமைச்சர் சி. விக்னேஸ்வரன் கூறியிருப்பது அப்பட்டமான பொய் என்று மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் தெரிவித்தார்.

முதலமைச்சர் மாகாணசபையில் உரையாற்றும்வேளை, தான் அங்கே இருக்கவில்லை எனவும், இன்றைய பத்திரிகைச் செய்திகளைப் பார்த்த போது இந்தச்செய்தி தமக்கு அதிர்ச்சியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

3000 முஸ்லிம்களுககு அல்ல 03 முஸ்லிம்களுக்காவது முதலமைச்சர் காணி வழங்கியிருந்தால் அதனை நிரூபித்துக் காட்ட வேண்டும் எனவும் ஜனூபர் சவால் விடுத்துள்ளார்.

வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு 25 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தமது இடங்களில் மீள்குடியேறத் துடிக்கும் வடக்கு முஸ்லிம்களின் அவலங்களைப் போக்குவதற்கு, முதலமைச்சர் தலைமையிலான வட மாகாணசபை இதுவரை எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதையும் அவர் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் எனவும் ஜனூபர் கோரியுள்ளார்.

‘முஸ்லிம் மக்கள் எப்படியாவது நன்மைகளைப் பெறுகின்றார்கள், தமிழ் மக்களே பாவம்’ என்று உயர் சபையில் முதலமைச்சர் பொடி வைத்து பேசியதிலிருந்து, முஸ்லிம்கள் தொடர்பான அவரது உள்ளக்கிடக்கையை தெளிவாக அறிய முடிகின்றது.

கடந்த அரசினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான விடயங்கள் பற்றி ஆராய 2011 ஏப்ரல் மாதம் ஜனாதிபதி செயலணிக்குழுவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைக்கமைய முஸ்லிம்களுக்கு காணிகளைப் பகிர்ந்தளிக்க அப்போது  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் தலைமையில் ஜனாதிபதி செயலணிக் குழுவின் பிரதிநிதிகளும் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பிரதிநிதிகளும் இந்தக் குழுவில் அங்கம் வகித்தனர். இந்தக் குழு மேற்கொண்ட நடவடிக்கைக்கு இணங்கவே மன்னார் மாவட்டத்திலும் வவுனியா மாவட்டத்திலும் முல்லைத்தீவிலும் அரச காணிகள் அடயாளங் காணப்பட்டு முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்டது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது உரையில் குறிப்பிட்டது போன்று, வட மாகாணசபை அந்த மக்களுக்கு ஓர் அங்குல நிலமாவது வழங்கப்படவில்லை என நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீனின் அளுத்தங்களினாலும் தொடர்ச்சியான வேண்டுகளினாலுமே மீள் குடியேறிய முஸ்லிம்களின் ஒரு சிறு தொகையினருக்கு இந்த நன்மை கிடைத்தது. மீள் குடியேற்றத்துடன் எந்த வகையிலும் சம்மந்தப்படாத கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பிரதிநிதிகள் – ஜனாதிபதி செயலணிக்குழுவில் அங்கம் வகித்தமை வடக்கு முஸ்லிம்  மக்களின் மீள்குடியேற்றத்தில் அந்தப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற றிசாட் பதியுதீன் எத்துணை தூரம் இந்த விடயத்தில் அக்கறை காட்டி இருக்கின்றார் என்பது ஒரு சாதாரண பாமரனுக்குக் கூட தெரிந்த விடயம்.

முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் அமைச்சர் றிசாட் – வட மாகாண சபையின் பல்வேறு தடைகளையும் சவால்களையம் எதிர் கொண்டிருக்கின்றார். மன்னாரிலுள்ள விடத்தல்தீவு முஸ்லிம்கள் மீள்குடியேறிய போது, தமிழ்க் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர் இனவாதக் கண்ணோட்டத்துடன் அதனைத் தடுத்தனர். முல்லைத்தீவில் முஸ்லிம்களின் பூர்வீகக் கிராமமான முறிப்பில் அவர்கள் மீளக்குடியேறுவதற்காக காணிகளை துப்புரவாக்கிய போது, வடமாகாண சபையின் அந்தப் பிரதேச மாகாணசபை உறுப்பினர்கள் சிலர், அப்பாவித் தமிழ் மக்களை உசுப்பி டோசர்களுக்கு முன்னால் குப்புறப் படுக்கச் செய்தனர். அமைச்சர் றிசாட்டும் நானும் தமிழ் மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதாகவும் முஸ்லிம்களை அடாத்தாக குடியேற்றுவதாகவும் தமக்குச் சாதகமான தனியார் ஊடகங்களை வரவழைத்து தமது பொய்யான கருத்துக்களை வெளியிட்டு எங்களை கேவலப்படுத்தினர்.

இத்தனை விடயங்கள் நடந்த போதிலும் முதலமைச்சர் வாய் திறக்காது பேசாமடைந்தையாகவே இருந்தார்.

அதுமட்டுமன்றி வடமாகாணத்தின் ஒரேயொரு முஸ்லிம் பிரதேச சபையென சிலாகிக்கப்படும் முசலியில் உள்ள கிராமமான சிலாவத்துறையில், கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழ் ‘கைத்தொழில் பேட்டை’ ஒன்றை அமைக்க அந்த அமைச்சு காணி கோரிய போது,முன்னாள்  நீதியரசர் விக்னேஸ்வரன் நீதியாக நடந்து கொள்ளவில்லை. சிலாவத்துறை உல்லாசப் பயணத்துறைக்கு ஏற்ற இடமென சாக்குப் போக்குச் சொல்லி, அதற்குத் தடைக்கல் போட்டார். இவைகள்தானா முஸ்லிம்கள் மீது அவர் காட்டுகின்ற அக்கறையும் பற்றும் என நான் கேட்க விரும்புகின்றேன்.

இத்தனைக்கும் மேலாக தென்னிலங்கையில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் ஹிஜ்ராபுரம், தண்ணீர் ஊற்று, முறிப்பு, நீராவிப்பிட்டி, முல்லைத்தீவுப்பட்டிணம் மற்றும் குமாரபுரம் ஆகியவற்றில் மீள்குடியேறி அவஸ்தைப் பட்டு வரும் முஸ்லிம்களை ஒரு தடவையாவது முன்னாள் நீதியரசர் ஏறெடுத்துப் பார்த்தாரா?

இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை வடக்கு முதலமைச்சர் நிறைவேற்றிய போது, 1990ம் ஆண்டு புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு அவர்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டு 25 ஆண்டுகள் அகதிகளாக இருக்கும் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் ‘இனச்சுத்திகரிப்பு தொடர்பான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுங்கள்’ என நாங்கள் பல தடவை கோரிய போதும், இற்றை வரை அதற்கு அவர் செவிமடுக்கவில்லையே. இதுதானா முஸ்லிம்கள் மீது அவர் காட்டுகின்ற கரிசனை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போனஸ் ஆசனத்தில் நியமிக்கப்பட்ட ‘நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்’ உறுப்பினர் ஐயூப் அஸ்மின், தன்னை நியமித்த கட்சியின் நிர்வாகத்தின் கீழ்வரும் வடமாகாண சபையை, முஸ்லிம்களின்  மீள்குடியேற்ற விடயத்தில் குற்றஞ்சாட்டுகின்றாரென்றால், அந்த சபையின் நடவடிக்கைகளில் அவர் எத்துணையளவு பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்பது புலனாகின்றது. ‘கிடைத்த வாய்ப்பை தவற விட்டமையாலேயே முஸ்லிம், சிங்கள மக்களை மீள் குடியேற்றுவதற்கான செயலணி உருவாக்கப் பட்டுள்ளதாக’ அவர் கூறியது இங்கே கருத்துக்கு எடுக்கப்பட வேண்டிய விடயம்.

இறுதியாக ‘கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை’ என்பதே எனது கருத்தாகும் என்றும் ஜனூபர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்