தவ்ஹித் ஜமாத் செயலாளர் ராசிக், புலனாய்வு பணியகத்தின் தகவலாளி: அமைச்சர் ராஜித தெரிவிப்பு
இனவாதக் கருத்துக்களை வெளிட்ட குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் நபர், முன்னைய அரசாங்கத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இயங்கிய, தேசிய புலனாய்வு பணியகத்துக்கு தகவல் வழங்குபராகச் செயற்பட்டவர் என்று, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் குறித்தே, அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை, மாற்று மதங்களை புண்படுத்தும் விதமாகப் பேசிமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிங்கள இளைஞன், நாமல் ராஜபக்ஷவின் நீலப் படையணி எனும் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் என்றும் அமைச்சர் ராஜித குறிப்பிட்டார். மேலும், அந்த இளைஞன் மஹிந்த ராஜபக்ஷவின் ஊர்வலங்களில் கலந்து கொண்டவர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம்கள் தொடர்பில் மிகவும் மோசமாக கருத்துக்களை வெளியிட்டு வந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட டான் பிரியசாத் என்பவர் தொடர்பாகவே, ராஜித இவ்வாறு குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்படுகின்றவர்கள் தொடர்பில், தாம் மிகவும் அவதானத்துடன் உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.