லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா; மைத்திரியின் உரைக்கு வினை
லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது ராஜினாமா கடிதத்தை இன்று திங்கட்கிழமை சமர்ப்பித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரை நீதிமன்றத்துக்கு அழைத்தமை தொடர்பில், கடந்த வாரம் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகியிருந்தது.
குற்றப்புலனாய்வு பிரிவினர், நிதிமோசடி விசாரணைப்பிரிவினர், மற்றும் லஞ்ச ஊழல் ஆணைக்குழு போன்றவை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு செயற்படுமானால், அவற்றுக்கு எதிராக தீர்மானங்களை எடுக்க நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் கூறியிருந்தார்.
ஜனாதிபதி வெளியிட்ட இந்த கருத்துக் காரணமாகவே லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பணிப்பாளர்களும் பதவி விலக தீர்மானம்
லஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க விலகியதை அடுத்து, ஆணைக்குழுவின் தலைவர் டி.பி. வீரசூரிய உட்பட ஆணையாளர்களும் பதவி விலக உள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இவர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டப்ளியூ. லால் ரஞ்சித் சில்வா மற்றும் சீ. நெவில் குருகே ஆகியோர் ஆணைக்குழுவின் ஆணையாளர்களாக பதவி வகித்து வருகின்றனர்.