ஜனாதிபதியின் இணையத்தளத்தினுள் ஊடுருவிய நபர், 17 வயது மாணவன்; கடுகன்னாவையில் கைது
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் ஊடுருவியதாக (Hacking) கூறப்படும் 17 வயதுடைய மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடுகன்னாவ பகுதியில் வைத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தளம் – கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடுருவப்பட்டிருந்த நிலையில், அதற்கு காரணமானவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று திங்கட்கிழமை குறித்த பாடசாலை மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இணையத்தளத்திற்குள் ஊடுருவியதாகக் கூறப்படும் மாணவர், அந்த இணையத்தளத்தில் சில பதிவுகளை இட்டிருந்தார்.
தமிழ், சிங்கள புத்தாண்டு காலமான ஏப்ரல் மாதத்தில் உயர்தர பரீட்சையினை நடத்த எடுத்த தீர்மானத்தினை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றும், இலங்கையில் இணையத்தளங்களைப் பாதுக்காக்கத் தவறின் எதிர்காலத்தில் இணையத் தாக்குதலுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் ஜனாதிபதியின் இணையத்தளத்தினுள் ஊடுருவியவர் பதிவுகளை குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன், பிரதமரின் தன்னிச்சையான தீர்மானங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், நாட்டினை நிர்வகிக்க முடியாவிடின் உடனடியாக, ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அந்த பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.