ஆயுர்வேத வைத்தியர்கள் 104 பேர், விரைவில் நியமனம்: கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர்

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள பாண்டிருப்புப் பிரதேசத்தில் 5.5 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்படவுள்ள, ஆயுர்வேத வைத்தியசாலைக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் மேற்கண்ட தகவலைக் கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
“கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற, வெளி மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 60 வைத்தியர்கள் இடமாற்றம் கோரியுள்ளனர்.
இவர்களுக்கு இடமாற்றங்களை வழங்குவதில் சிரமம் காணப்பட்டது. ஆனால், தற்போது இடமாற்றம் கோரியுள்ள வைத்தியர்களுக்கு அதனை வழங்கவுள்ளோம்.
யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு, ஆயுர்வேத வைத்திய சேவையை வழங்க வேண்டுமென்ற நோக்கில், ஆயுர்வேத வைத்தியசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம்” என்றார்.