துறைமுகங்கள் அதிகாரசபையின் தலைவர், ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் (வீடியோ இணைப்பு)
இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவரும், நிஷாந்த ரணதுங்கவின் சகோதரருமான தம்மிக்க ரணதுங்க – ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியதாக முறையிடப்பட்டுள்ளது.
சீ.எஸ்.என். ஊடக நிறுவனத்தைப் பயன்படுத்தி பணச் சலவையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு மீதான விசாரணை, இன்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட சமயத்தில், அங்கு வருகை தந்திருந்த தம்மிக்க ரணதுங்க, படம் எடுத்துக் கொண்டிருந்த ஊடகவியலாளரை அச்சுறுத்தினார்.
குறித்த ஊடகவியலாளர் நீதிமன்றத்தின் வெளிப்புறத்தில் படம் எழுத்துக் கொண்டிருந்தபோது, அவரை இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபையின் தலைவர் அச்சுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி ஊடகவியலாளரை கெட்ட வார்த்தையில் திட்டியதோடு, “உன்னைப் பார்த்துக் கொள்வேன்” என்று தம்மிக்க மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில், தான் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளதாக குறித்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதற்கு தாம் தயாராக உள்ளதாக நிஷாந்த ரணதுங்கவின் சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
தம்மிக்க ரணதுங்க – இலங்கை துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரராவார்.