தலைப்புச் செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு 09 பேர் விண்ணப்பம்

– நூருல் ஹுதா உமர் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்காக ஒன்பது பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அந்தப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் பதவிக்காலம் கடந்த 2024.08.08 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. அதனையடுத்து புதிய உபவேந்தர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டது. அதன்பொருட்டு 07 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதன் பின்னர், பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர்கள் விண்ணப்பதாரிகளுக்கு 07அளவுகோல்களின் (Criteria) கீழ் புள்ளிகள் இட்டு, அவர்கள் பெற்றுக் கொண்ட அதிகூடிய புள்ளிகள் அடிப்படையில் மூவரை தெரிவு செய்து, பரிந்துரைத்திருந்தனர். அதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அங்கிகரித்திருந்தது.

ஆயினும் குறித்த மூன்று பேரில் ஒருவரை உபவேந்தர் பதவிக்கு இறுதியாக தெரிவு செய்பவர் ஜனாதிபதி எனும் வகையில், உபவேந்தர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களை – தற்போதைய ஜனாதிபதி நிராகரித்தார்.

அதனையடுத்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய பல்கலைக்கழக பேரவையின்  சார்பில் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், கடந்த பெப்ரவரி 06 ஆம் திகதி உபவேந்தர் பதவிக்காக மீண்டும் விண்ணங்களைக் கோரியிருந்தார். அதற்கமைய மார்ச் 06 ஆம் திகதி 3.00 மணி வரை 09 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் எம்.ஐ.எஸ். சபீனா, பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம். முஸாதிக், பேராசிரியர் ஏ.ஜௌபர்  மற்றும் கலாநிதி யூ.எல். செயினுடீன் உள்ளிட்ட ஒன்பது பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தொடர்பான செய்தி: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தர் யார்: ஜனாதிபதிக்கு மூன்று பெயர்கள் சிபாரிசு