
இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை ஜனாதிபதி முன்வைத்தார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி;
“மக்களுக்கு நாட்டின் நீதித்துறை மீது அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நீதித்துறை மீது, மக்களின் நம்பிக்கை கட்டியெழுப்பப்படும். இதற்காக யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லாமல் – அனைவரும் சுதந்திரமாக செயற்படும் வகையில் நீதித்துறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். நாட்டில் யாரும் நீதிக்கு மேன்மையானவர்களாக இருக்க மாட்டார்கள்.
நாட்டின் அரச சேவை தொடர்பாக மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள். தற்போதைய அரசாங்கமே அதிகபடியான அரச சேசையாளர்களின் ஆதரவைப் பெற்ற அரசாங்கமாகும். அந்தவகையில், திருப்திகரமான அரச சேவைத்துறையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் மத்தியில் நாடாளுமன்றம் தமது கீர்த்தியை இழந்திருந்தது. மக்கள் பெரும்பான்மையான ஆணையை வழங்கிய அரசாங்கம் என்ற அடிப்படையில், நாடாளுமன்றின் கௌரவத்தை பேணுவது முதலாவது கடமையாகும்.
பொருளாதார நன்மைகள் மக்களிடையே நியாயமான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும். இதற்காக சந்தை ஏகபோகங்கள் இல்லாதொழிக்கப்படும்.
விவசாயம் எமது முதன்மையான பொருளாதார துறையாக மாற்றப்படும். இதற்கான சலுகைகள் அதிகரிக்கப்படும்.
நாட்டை ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நகர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பான 3ஆவது பணியாளர் மட்ட உடன்படிக்கையை வெள்ளிக்கிழமைக்குள் கைச்சாத்திட அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.



