மகனைக் காண, மஹிந்த வந்தார்
யோசித ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்திருந்தார்.
இதன்போது யோசித ராஜபக்ஷவின் தம்பியும், மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது புதல்வருமான ரோஹித ராஜபக்ஷவும் தந்தையுடன் இணைந்து வந்திருந்தார்.
யோசித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, இந்த ஆட்சியாளர்கள் சிங்கத்தின் வாலினை மிதித்து விட்டதாகவும், சிங்கம் சும்மா விடப்போவதில்லை என்றும், ரோஹித ராஜபக்ஷ அவரின் பேஸ்புக் பக்கத்தில் கொதித்தெழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பணச் சலவையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த யோசித ராஜபக்ஷ, இன்றைய தினம் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.