தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடியமை, தேசிய ஒற்றுமைக்கு குந்தகமானது; உதய கம்மன்பில
தமிழ் மொழியில் தேசியகீதம் பாடப்பட்டமையானது தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியாகும் என்று, பிவிமுறு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 68ஆவது சுதந்திரதின தேசிய நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையை சுட்டிக்காட்டியே அவர் குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
“தாய் நாட்டை பிரித்துக் கொள்வதில் மட்டும் இதுவரையில் பிளவடைந்திருந்த சமூகங்கள், தற்போது தேசிய கீதம் தொடர்பிலும் பிளவடைந்துள்ளன. தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவது அரசியல் அமைப்பின் 07ஆம் சரத்தினை மீறும் செயலாகும்.
எனவே, சுதந்திர தினத்தில் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடியதன் மூலம் ஜனாதிபதி தமக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வரக்கூடிய பாரிய குற்றமிழைத்துள்ளார். தேசிய கீதம் மற்றும் தேசிய கொடி என்பன தேசிய ஒற்றுமையின் குறியீடுகளாகும்.
தேசிய கீதத்தைத தமிழில் பாடுவதற்கு முன்னர், 1721 மொழிகள் காணப்படும் அண்டை நாடான இந்தியாவை முன்னுதாரணமாக கொண்டிருக்க வேண்டும்.
இதுமட்டுமல்லாமல், 1721 மொழி பேசும் இந்தியாவில் பெங்காலி மொழியில் தேசிய கீதம் பாடப்படும் போது, குறுகிய அரசியல் நோக்கம் கொண்டு, தூரநோக்கின்றி எடுக்கப்பட்ட தீர்மானம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல” என்றார்