இலங்கை பிரஜையல்லாதவர் அரசியல் கட்சியொன்றை பதியலாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்
இலங்கைப் பிரஜை அல்லாத ஒருவர் – இலங்கையில் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரஜைகள் அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு சட்டரீதியாக எந்த தடையும் இல்லை எனவும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கூறியுள்ளார்.
நாட்டின் பிரஜை அல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதை மட்டுமே இலங்கைச் சட்டம் தடுப்பதாகவும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியவர் டயானா கமகே எனும் தகவல்கள் உள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
டயானாவுக்கு தடை
இதேவேளை, முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயனா கமகே வெளிநாடு செல்வதற்கு, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று (09) தடை விதித்துள்ளது.
நீதிமன்றில் இன்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் திலின இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
குறித்த உத்தரவின் பிரதியை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கும், தேசிய புலனாய்வு பிரிவுக்கும் அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீதவான் திலின கமகே அறிவுறுத்தியுள்ளார்.
டயனா கமகே பிரித்தானியப் பிரரைஜ என்பதால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க – சட்டரீதியாக தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் நேற்று ( 08 ) அறிவித்தது.
தொடர்பான செய்தி: நாடாளுமன்ற உறுப்புரிமை இழந்தார் டயானா கமகே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு