ரஞ்சன் வெளிநாடு செல்வதை தடுத்த குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள்: காரணத்தை வெளியிட்டார் ரஞ்சன்

🕔 October 28, 2022

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட பிழையினால், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை இரவு தான் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க, இன்று (28) அமெரிக்கா செல்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

“எனக்கு எந்த பயணத் தடையும் விதிக்கப்படவில்லை என்று எனது வழக்கறிஞர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து நான் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் எனது பயணத்தைத் திட்டமிட்டேன். இருந்த போதிலும், குடியகல்வு திணைக்களத்தின் கணினி வலையமைப்பு புதுப்பிக்கப்படவில்லை என்பதே பிரச்சினையாகும்” என ரஞ்சன் ராமநாயக்க ஆங்கில ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.

“சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் நான் பேசினேன். இந்த விவகாரம் தீர்க்கப்பட்டுள்ளது. விரைவில் எனது பயணத்தைத் தொடங்குவேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை, நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்காது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாக திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இசை நிகழ்ச்சிக்காகவும், அமெரிக்காவில் தனது ‘கேம்’ திரைப்படத்தின் திரையிடலுக்காகவும் அமெரிக்கா செல்லும் பொருட்டு,, நேற்று இரவு 8.15 மணிக்கு கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் ரஞ்சன் பயணிக்கவிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்