கல்முனை மாநகர சபையின் மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக கலீலுர் ரஹுமான் சத்தியப் பிரமாணம்
– பாறுக் ஷிஹான் –
கல்முனை மாநகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் முஹம்மது அலியார் கலீலுர் ரஹுமான், கல்முனை மாநகர சபை மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
கல்முனை மாநகர சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, அந்தக் கட்சியின் தலைவர் ரிசாட் பதியுதீனினுடை பரிந்துரையின் பேரில், கடந்த காலங்களில் ‘கிறீன் பீல்ட்’ கூட்டு ஆதன முகாமைத்துவக் குழுவின் தலைவராக செயற்பட்ட அரசியல் சமூக செயற்பாட்டாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ கலீலுர் ரஹுமான் நியமிக்கப்ப்பட்டார்.
இவர் பொதுத் தேர்தலில் மாவட்ட பாராளுமன்றத்தில் போட்டியிட்டவர் என்பதும்குறிப்பிடத் தக்கது.
இவரது நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் வெளியிடபட்டது.
புதிய உறுப்பினராக பதவியேற்ற இவர் கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டிருந்தார்.