இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோக வழக்கு: பிணை கிடைத்தும், சிறை சென்ற கல்முனை விகாரதிபதி

🕔 September 30, 2022

– பாறுக் ஷிஹான் –

ளம் பிக்குககளை பாலியல்  துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் வைக்கப்பட்டுள்ள கல்முனை சுபத்ரா ராமய  விகாராதிபதி  ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் – நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிப்பதற்கு இன்று (30) நீதிமன்றம் உத்தரவு வழங்கியபோதும், , பிணைகாரர்கள் வருகை தராமையினால் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில், குறித்த வழக்கினை எதிர்வரும் நொவம்பர்  மாதம் 04 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கல்முனை பௌத்த விஹாரையில் வைத்து 3 இளம் பிக்குகள்  பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமைதொடர்பான வழக்கு  இன்று (30) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது இரு தரப்பினர் சார்பிலும் ஆஜரான சட்டத்தரணிகளின் சமர்ப்பணம் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு, சந்தேக நபரான பௌத்த மதகுரு தொடர்புபட்ட 3 வழக்குகளில் தலா 3 பேர் வீதம் 9 பேர் கொண்ட 5 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில், பௌத்த பிக்குவுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் மாதத்தின் 4 ஆம் வாரம் வரும் ஒவ்வொரு  ஞாயிற்றுக்கிழமைகளிலும் – அருகில் உள்ள கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு சென்று, பௌத்த பிக்கு கையொப்பம் இட வேண்டும் என்றும், குறித்த வழக்கின் சாட்சிகள்  குடும்பத்தினரை அச்சுறுத்தக் கூடாது எனவும், வழக்கில் தலையீடு செய்யாதிருத்தல் வேண்டும் என்றும் நிபந்தனை விதித்த நீதிமன்றம், சந்தேக நபரான பௌத்த பிக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்ததோடு அவரின் கடவுச்சீட்டினை மன்றிற்கு ஒப்படைத்தல் வேண்டும் எனவும் பணித்தது. 

பௌத்த பிக்குவிடம் கடவுச்சீட்டு  இல்லை எனின் உரிய தரப்பினர் உறுதிப்படுத்தி மன்றுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், கிராம சேவகரின் நற்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் இதன்போது நிபந்தனை விதித்தது.

அம்பாறை மாவட்டம் – சடயந்தலாவை பகுதியிலுள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 இளம் பிக்குகள், கல்முனை விஹாரையில் வைத்து சில வாரங்களுக்கு முன்னர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டனர்.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் செப்டம்பர் 13 ஆந் திகதி  கல்முனை சுபத்ரா ராமய  விகாரதிபதி  ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் என்றழைக்கப்படும் கல்முனை விகாரையின் பிரதம பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தொடர்பான செய்தி: பாலியல் துஸ்பிரயோக வழக்கு; கல்முனை விகாரதிபதிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரான சட்டத்தரணி ஆஜர்: ஆனாலும் விளக்க மறியல் நீடிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்