பாலியல் துஸ்பிரயோக வழக்கு; கல்முனை விகாரதிபதிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரான சட்டத்தரணி ஆஜர்: ஆனாலும் விளக்க மறியல் நீடிப்பு

🕔 September 23, 2022

– பாறுக் ஷிஹான் –

ளம் பிக்குகள் மூவரை பாலியல்  துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட கல்முனை பிரதம விகாரதிபதியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாமறு கல்முனை நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.

குறித்த விகாரதிபதி தொடர்பில், நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் பிரகாரம் – பிணை கோரிக்கை மறுக்கப்பட்டு, எதிர்வரும் செப்டம்பர்  மாதம் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டது.

கல்முனை பௌத்த விகாரையின் விகாரதிபதி 3 இளம் பிக்குகள்  பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு இன்று (23) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேக நபரான பௌத்த பிக்குவை  எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை  நீதிமன்ற நீதிவான்  உத்தரவிட்டார். 

அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இளம் பிக்குகள், கல்முனை விஹாரையில் வைத்து, பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்றின் அடிப்படையில் செப்டம்பர் 13 ஆந் திகதி  கல்முனை சுபத்ரா ராமய  விகாரதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரை, அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசேட பிரிவினர் – சந்தேகத்தின் அடிப்படையில்  கைது செய்து, கல்முனை  நீதிமன்ற நீதிவான் முன்னிலையில்   ஆஜர்படுத்தியிருந்தனர்.

இதனடிப்படையில் சந்தேக நபரை இன்று 23 ஆந் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று (23) இவ்வழக்கு மீண்டும்  விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை தொடர்பில் இரு தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளின் நீண்ட நேர சமர்ப்பணங்கள் ஆராயப்பட்டதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணை பூரணப்படுத்தப்படாமை  ஆகியவற்றை  கருத்திற் கொண்டு,  சந்தேக நபரான தேரரின்  பிணை கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவரை 30 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

குறித்த பாலியல் துஸ்பிரயோக வழக்கில் – பிரதான சந்தேக நபராக குறிப்பிடப்படும் கல்முனை சுபத்ரா ராமய விகாரதிபதி சார்பில் இன்று ஆஜரான முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான ஸ்ரீயானி விஜேவிக்கிரம தலைமையிலான சட்டத்தரணிகள் குழு, மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட  மருத்துவ அறிக்கை தொடர்பில் நீண்ட விண்ணப்பம் ஒன்றினை சமர்ப்பித்து பிணைக்கோரிக்கை முன்வைத்தனர்.   

அதே நேரம் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் ஊடாக பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு இளம் பிக்குகள் ஆளாகியுள்ளதாக, பொலிஸ் தரப்பில் நீதவானிடம் அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டது.

தொடர்பான செய்தி: இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கல்முனை விகாரதிபதி கைது: விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்