‘சிங்க லே’ எழுதியதன் பின்னணியில், ஊடகவியலாளர் ஒருவர் உள்ளார்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு
‘சிங்க லே’ என இனவாதத்தினைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
முஸ்லிம்களின் வீட்டு கதவுகளில் நிறப்பூச்சுக் கொண்டு ‘சிங்க லே’ என எழுதப்பட்டமை, மற்றும் அவ்வாறான செயற்பாடுகள் குறித்து இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ராஜிதவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“இது குறித்து ரகசிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் விசாரணை அறிக்கைகள் கிடைத்துள்ளன. இந்த அறிக்கைக்கு அமைய கடுமமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த காலங்களில் தேசிய இணக்கம் தொடர்பிலும், சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பிலும் குரல் கொடுத்து வந்த ஊடகவியலாளர் ஒருவரே இதன் பின்னணியில் இருந்து செயற்படுவதாக தெரியவந்துள்ளது.
அந்த ஊடகவியலாளர், மங்கள சமவரவீரவுடன் இணைந்திருந்து பின்னர் வெளியேறி இவ்வாறு செயற்பட்டுள்ளார்.
இவ்வாறானவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் இனவாதம், மதவாதம் என்பவற்றை பரப்பும் வகையில் செயற்படுவது கவலையளிக்கிறது” என்றார்.