காணி மோசடியுடன் தொடர்புபட்ட ஒருவரை, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக்க முயற்சி: ‘புதிது’ வசம் ஆவணங்கள்
– அஹமட் –
காணி மோசடியுடன் தொடர்புடைய ஒருவரை, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் தலைவராகக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை சிலர் மேற்கொண்டு வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது.
குறித்த நபர் அரச சேவையில் பணியாற்றிய போது, ஒலுவில் பகுதியிலுள்ள காணிச் சீர் திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணியை – நிருவாக சேவை அதிகாரிகள் சிலருடன் இணைந்து மோசடியாகக் கையகப்படுத்தியிருந்தார்.
ஒலுவிலிலுள்ள காணிச் சீர் திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 21 ஏக்கர் காணியில், 06 ஏக்கர் 02 றூட் அளவான காணி, இவ்வாறு மோசடியாக அபகரிக்கப்பட்டது.
குறித்த காணி ஏக்கரொன்று 60 லட்சம் ரூபாய் பெறுமதியாகவுள்ள நிலையில், ஏக்கர் ஒன்றுக்காக 01 லட்சத்து 60 ஆயிரம் ரூபாவுக்குட்பட்ட தொகையை மட்டும் செலுத்தி, மேற்படி அரசாங்க அதிகாரிகள் அவற்றினை மோசடியாகக் கையகப்படுத்தியிருந்தனர். அத்துடன், காணியினை உரிமைப்படுத்துவதற்காக, இவர்கள் மோசடி ஆவணங்களைத் தயாரித்தும் வழங்கியிருந்தனர்.
இந்த மோசடி குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அம்பலப்படுத்தியதோடு, உரிய இடங்களுக்கு முறையிட்டுமிருந்தார். இதன் பிரகாரம் விசாரணைகள் நடந்தன.
இதனையடுத்து இந்தக் காணியை மோசடியாக அபகரித்தவர்களில் கணிசமானோர், அவற்றினை ஒலுவில் பெரிய பள்ளிவாசலுக்கு திருப்பிக் கையளித்ததாக தெரியவந்தது.
ஆனாலும், தற்போது அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர் பதவியைப் பெறுவதற்கு முயற்சிக்கும் நபர், ஒலுவிலில் மோசடியாக அபகரித்த காணியை – தனது உறவினரின் பெயரில் பதிவு செய்திருந்த நிலையில், அந்தக் காணியை மீளவும் கையளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி நபர் மோசடியாக அபகரித்த காணியை, அவரின் உறவினர் பெயரில் பதிவு செய்திருந்தார். அந்த ஆவணம் – ‘புதிது’ செய்தித்தளத்தின் வசம் உள்ளது.
குறித்த நபர், அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராகும் பட்சத்தில், அந்த ஆவணத்தை ‘புதிது’ செய்தித்தளம் வெளியிடும்.
இதேவேளை, குறித்த நபர் – அரச சேவையில் இருந்த போது மேற்கொண்ட மேலும் பல மோசடிகள் தொடர்பான தகவல்களும் உள்ளன. அவை குறித்தும் நாம் செய்திகளை வெளியிடத் தயாராகவுள்ளோம்.
பள்ளிவாசல் நிருவாகத்தில் இடம்பெறுகின்றவர்கள், பொதுச் சொத்துக்களை மோசடி செய்தவர்களாக இருப்பதை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது.
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபைக்கு, குடி வழியாக அண்மையில் மரைக்காயர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களிலிருந்தே, பள்ளிவாசலின் தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: ஒலுவில் அரச காணியை அபகரித்த அதிகாரிகள்; மீள வழங்காமல் ஏமாற்றி வருவதாக மக்கள் விசனம்