பொத்துவில் பிரதேசத்துக்கு முழுமையான குடிநீர் விநியோகம், அடுத்த ஆறு மாதங்களுள் வழங்கப்படும்; அமைச்சர் ஹக்கீம்

🕔 December 26, 2015

Hakeem - 001
– மப்றூக் –


பொத்துவில் பிரதேசத்துக்குரிய முழுமையான குடிநீர் விநியோகம், அடுத்த 06 மாத காலத்தினுள் வழங்கப்படும் என்று – நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதேவேளை, நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் குடிநீரினை வழங்கும்பொருட்டு, நீர்த் தேக்கமொன்றினை உருவாக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் உயர் அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று, அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே, அமைச்சர் ஹக்கீம் மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“பொத்துவில் பிரதேசத்துக்கான குடிநீர் விநியோகம் போதியளவு வழங்கப்படாமைக்கு தீர்வு காணும் முகமாக, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மேலதிகாரிகளை அக்கரைப்பற்றுக் காரியாலயத்துக்கு அழைத்து, இன்றைய தினம் தீவிரமாகக் கலந்தாலோசித்துள்ளோம்.

ஏற்கனவே, என்னுடைய பணிப்புரையின் கீழ், பொத்தவில் பிரதேசத்துக்குரிய குடிநீர்த் தேவையினைப் பூர்த்தி செய்வதற்கான பல நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம்.

பொத்துவில் பிரதேசத்துக்கான குடிநீரினை நிலத்தடி நீர்க் குழாய்க் கிணறுகளினூடாக வழங்கிக் கொண்டிருக்கின்றோம். ஆயினும், இப்போதைக்கு 04 குழாய்க் கிணறுகள்தான் பாவனையில் உள்ளன.

இதற்கு மேலதிகமாக, மேலும் 05 குழாய்க் கிணறுகளை பிரத்தியேகமாக நிர்மாணிப்பதற்கு கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.

இவற்றினைப் பூரணப்படுத்திய பின்னர், இப்போதைக்கு வழங்கப்படுகின்ற 1800 கனமீற்றர் அளவிலான குடிநீருடன், இன்னும் 2000 கனமீற்றர் அளவு குடிநீரினை சேர்த்து வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

மேற்படி நடவடிக்கைகள் அடுத்த 06 மாத காலப் பகுதிக்குள் பூரணப்படுத்தப்படும்.

நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் பாணமை, லகுகலை போன்ற எல்லாப் பிரதேசங்களுக்கும் போதியளவு குடிநீரினை வழங்கும் நோக்குடன், நீர்த் தேக்கமொன்றினை உருவாக்கும் தீர்மானமொன்றினையும் அமுல்படுத்தியுள்ளோம்.

அந்த நீர்த் தேக்கத்தினை அமைத்ததன் பின்னர் சியம்பலாண்டுவ, பொத்துவில், பாணம மற்றும் லகுகல உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களுக்கும் பூரணப்படுத்தப்பட்ட குடிநீர்த் திட்டமொன்றினை அமுல்படுத்தவுள்ளோம். இதற்கான அனுமதி அமைச்சரவையில் பெறப்படும்.

எனவே, இந்தப் பின்னணியில் அடுத்த 06 மாத காலத்தினுள் பொத்துவில் பிரதேசத்துக்கு, முழுமையான குடிநீர் விநியோகம் வழங்கப்படும்” என்றார்.

இக் கலந்துரையாடலில், மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகாரசபைத் தலைவர் பொறியியலாளர் கே.ஏ. அன்சார், நீர்வழங்கல் அதிகாரசபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஜே.என். கரீம், அமைச்சர் ரஊப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் மற்றும் அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். Hakeem - 003Hakeem - 002

Comments

புதிது பேஸ்புக் பக்கம்