சம்மாந்துறைக்குள் புகுந்த யானைகள்: ஒரே நேரத்தில் 12 இடங்களில் சேதம்; நெற் களஞ்சியங்களும் உடைப்பு
🕔 March 13, 2022
– ஐ.எல்.எம். நாஸிம் –
சம்மாந்துறை பிரதேசத்தில் யானைகள் இன்று அதிகாலை 12 இடங்களில் புகுந்து சேதங்களை விளைவித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இன்று (13) அதிகாலை இரண்டு மணியளவில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
சம்மாந்துறையிலுள்ள சுற்று மதில்கள் மற்றும் நுழைவாயில்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளதோடு, நெற் களஞ்சிய சாலையில் புகுந்து அங்கிருந்த நெல் மூட்டைகளையும் யானைகள் உட்கொண்டு விட்டு சென்றுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக இரவு நேரங்களில் வீதி விளக்குகள் அணைக்கப்பட்டுள்ள நிலையிலேயெ, இவ்வாறு யானைகள் ஊர்களுக்குள் நுழைந்துள்ளன.
சேத விவரங்கள் தொடர்பாக சம்மாந்துறை பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் அஸாறுடீன் தகவல்களை வழஙகினார்.
சம்மாந்துறை கல்லரிச்சல் 02 கிராம சேவையாளர் பிரிவில் 02 இடங்களிலும், புளக் ஜே கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் 04 இடங்களிலும், மலையடி கிராமம் 02 கிராம சேவையாளர் பிரிவில் 05 இடங்களிலும், விளினையடி 01 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு இடத்திலும் என, மொத்தமாக இதுவரை கிடைக்கப்பெற்ற தகவலில் படி 12 இடங்களில் யானைகள் சேதங்களை விளைவித்துள்ளன என அவர் தெரிவித்தார்.
பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்டயீடுகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் தலையிட்டு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.