கேரள கஞ்சாவை சொகுசு காரில் கடத்தியோர் கல்முனை பொலிஸாரிடம் சிக்கினர்: பணமும் அகப்பட்டது
🕔 February 23, 2022
– பாறுக் ஷிஹான் –
கேரளா கஞ்சாவினை சொகுசு காரில் கடத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேக நபர்களை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் – பெரிய நீலாவணை பகுதியில் இன்று புதன்கிழமை (23) மதியம் கல்முனை பொலிஸார் மேற்படி நபர்களைக் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டோர் 27 மற்றும் 28 வயதுடையவர்களாவர்.
நீண்ட காலமாக கேரளா கஞ்சா வாகனங்களின் மூலம் கடத்தப்பட்டு விற்பனை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, கல்முனை பொலிஸார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து பெரியநீலாவணை பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பு காவலரணில் பாதுகாப்பினை பலப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் பொலனறுவை பகுதியில் இருந்து பொத்துவில் நோக்கி ஹொன்டா ரக அதி சொகுசு காரில் 10 கிலோக்கும் அதிகமான கஞ்சா பொதிகளுடன் பயணம் செய்த இரு சந்தேக நபர்கள், பொலிஸ் மற்றும் ராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனையில் சிக்கினர்.
கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரி.எச்.எம். லசந்த புத்திகவின் நெறிப்படுத்தலில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி எம். ரம்சின் பக்கீர் வழிகாட்டலில் துரிதமாக செயற்பட்ட பிரதம பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் மற்றும் உப பொலிஸ் பரிசோதகரும் நிர்வாக பொறுப்பதிகாரியுமான ஜெ.எம்.ஏ. திசாநாயக்க பொலிஸ் சார்ஜன்ட் ஏ.எச். மஜீத் (64270), உசைன் (62072), மஜீத் (43973), பொலிஸ் உத்தியோகத்தர்களான சதுன் (79554), சிந்தக (74629), விஜித (90954), பொலிஸ் சாரதிகளான ஏ.எச்.எம். ஹம்தான் மற்றும் வசந்த குழுவினர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த காரினை தடுத்து நிறுத்தி, அதில் பயணம் செய்த இரு சந்தேக நபர்கள் மற்றும் ரூபா 03 லட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் 04 கைத்தொலைபேசி உள்ளிட்டவற்றினைக் கைப்பற்றியுள்ளனர்.