“கடந்த அரசாங்கங்களை விடவும், எமது அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது”: அமைச்சர் உதய கம்மன்பில

🕔 October 30, 2021

ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ரணில் ஆகியோரது ஆட்சி காலத்தை காட்டிலும் முறையற்ற வகையில் தமது அரசாங்கம் செயற்படுவதாக வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

“அமைச்சு பதவிகளை வகித்துக் கொண்டு அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தால் எதிர்காலம் எம்மை சபிக்கும். இதன் காரணமாகவே மக்களிடம் அனைத்தையும் பகிரங்கப்படுத்த தீர்மானித்துள்ளோம்” எனவும் அவர் கூறியுள்ளார்.

‘மக்கள் பேரவை’ எனும் பெயரில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் இணைந்து புறக்கோட்டையிலுள்ள ஹோட்டலொன்றில் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“அமெரிக்க நிறுவனத்துக்கு யுகதனவி மின்நிலைய பங்குகள் விலைமனுக் கோரல் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இரண்டு பிரதான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன . திறைச்சேரிக்கு சொந்தமான 40 சதவீத பங்குகளையும், புதிதாக நிர்மாணிக்கப்படும் மின்நிலையத்துக்கு எரிவாயு விநியோகத்தையும் அமெரிக்காவின் நியூபோர் நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பிலான ஒப்பந்தம் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது.

யுகதனவி மின்நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கும், இயற்கை எரிவாயு திரவ விநியோகம் செய்வதற்குமான பகிரங்க விலைமனுக்கோரல் கடந்த பெப்ரவரி மாதம் விடுக்கப்பட்டது.

நிர்வாக கப்பல் , எரிவாயு விநியோக குழாய் ஆகியவை தொடர்பிலான மனுக்கோரல் மாத்திரமே விடுக்கப்பட்டது. எரிவாயு விநியோகத்துக்கான அனுமதி வழங்கப்படவில்லை.

அப்போது இந்த அமெரிக்க நிறுவனம் விலைமனுக்கோரலில் பங்குப்பற்றவில்லை. தற்போது எவ்விதமான விலைமனுக்கோரலும் இல்லாமல் இந்த நிறுவனத்துக்கு பங்குகள் வழங்கப்பட்டுள்ளமை முறையற்றதாகும். 

இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களில் பல முறைக்கேடுகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் எந்த அரசாங்கமும் விலைமனுகோரல் இல்லாமல் எவ்வித அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்கவில்லை.

கடந்த அரசாங்கங்களை காட்டிலும் எமது அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது.என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.பிற நாடுகளுக்கு தேசிய வளங்களை வழங்குவது ஆபாத்தானது. அதிலும் அமெரிக்கா என்பது மிகவும் அச்சுறுத்தலானது.

இலங்கையின் சுயாதீனத்தில் தொடர்ந்து அமெரிக்கா தலையிடுகிறது. கடந்த காலங்களில் பல அழுத்தங்களை பிரயோகித்திருக்கிறது. ராணுவத்தினரை தண்டித்தல், சமஷ்டி அரசியல் யாப்பு உருவாக்கம் ஆகிய விடயங்களில் அமெரிக்கா தொடர்ந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கிறது.

வலு சக்தி துறை நாட்டினதும், அரசாங்கத்தினதும் இருப்புக்கு பிரதானமானது. இலங்கைக்கு எரிவாயு விநியோகிக்கும் உரிமை அமெரிக்க நிறுவனத்துக்கு நிரந்தரமாக வழங்கப்பட்டுள்ளது.

வலுசக்தியின் அதிகாரங்கள் அமெரிக்கா வசம் சென்றால், அமெரிக்கா இதற்கு முன்னர் விதித்த கட்டளைகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய வரும். அத்துடன் சீனா, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளை பகைத்துக் கொள்ள நேரிடும். 

அமெரிக்காவின் ஆதிக்கம் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உலக நாடுகளின் நடப்பு நிலவரங்கள் ஊடாக அறிந்து கொள்ளலாம்.

அமைச்சு பதவிகளை  வகித்துக் கொண்டு அரசாங்கம் எடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கும் தலையாட்டிக் கொண்டிருந்தால் எதிர்கால தலைமுறையினர் எம்மை சபிக்கும். இதன் காரணமாகவே தவறுகளை பகிரங்கமாக வெளிக்காட்டியுள்ளோம் என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்