சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு அரசாங்கத்திடம் இறக்குமதியாளர்கள் கோரிக்கை

🕔 October 19, 2021

ந்தையில் சீனியின் விலை மீள அதிகரித்துள்ள நிலையில் சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர் – நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

தற்போது சீனிக்கான கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் மீண்டும் சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ளது.

அண்மையில் சீனி பதுக்கப்பட்டிருந்தமையினால் ஒரு கிலோகிராம் சீனியின் விலை 230 ரூபா வரை அதிகரித்திருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த சீனி மீட்கப்பட்டதோடு அரசாங்கத்தினால் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய, வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 122 ரூபா என கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டது.

எவ்வாறாயினும், தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 135 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

அத்துடன், சிவப்பு சீனி ஒரு கிலோகிராம் 125 ரூபா என கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்ட போதிலும் அது சந்தையில் 138 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இது தொடர்பான விசேட சுற்றிவளைப்புகள் நுகர்வோர் அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தையில் வெள்ளை சீனி இல்லை எனவும் சிவப்பு சீனி மாத்திரமே உள்ளதாகவும் சீனி இறக்குமதியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அரசாங்கத்தினால் சீனி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதி தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்