நாட்டில் 31 வீதமான ஆண்கள் புகைக்கின்றனர்; 25 ரூபாவால் சிகரட் விலை அதிகரிக்கப்பட வேண்டும்: கணக்கெடுப்பில் தகவல்
அரச வருமானத்தை உயர்த்துவதற்காக அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும்பான்மையானோர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் இதனைத் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 89.3 சதவீதமானோர் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்தத் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் 31 சதவீதமான ஆண்கள் இன்னும் புகைப்பிடிப்பவர்களாக இருப்பதுடன், மேலும் 26 சதவீதமானவர்கள் அதிலிருந்து மீண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் மேலும் 43 சதவீதமானோர் புகைப்பிடிக்காதவர்கள் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த ஆய்வின்போது சிகரெட்டுக்கான விலை எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில், அதற்கு 59.1 சதவீதமானோர் 25 ரூபாவிற்கும் மேலாக விலை அதிகரிக்க வேண்டும் என பதிலளித்துள்ளனர்.