தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: அரசியல் தலைமைகளைத் தலையிடுமாறும் கோரிக்கை

🕔 September 28, 2021

– க. கிஷாந்தன் –

ஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக அந்த தோட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (28) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகம் தேயிலை தோட்டங்களை காடுகளாக்கி சுத்தம் செய்ய நடவடிக்கைகளை எடுக்காமல், 20 கிலோவுக்கு அதிகமான தேயிலை கொழுந்தினை கொய்து தரும்படி வழியுறுத்துவதனால் ஏற்பட்ட முறுகல் நிலையை முன்னிறுத்தி இந்த ஆர்பாட்டம் இன்று காலை இடம்பெற்றது.

இந்த விடயத்தில் தோட்ட நிர்வாக அதிகாரிக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் வாக்குவாதமும் முறுகல் நிலையும் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத் தோட்டத்தின் தேயிலைக்காணிகள் பல நல்ல தேயிலை விளைச்சலை தரக்கூடியது. ஆனால் தோட்ட நிர்வாகம் இந்த தேயிலை நிலங்களை சுத்தம் செய்து கொடுபதில் அக்கறை காட்டுவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

“இருந்தும் இவ்வாறான நிலையில் நாளொன்றுக்கு 20 கிலோவுக்கு அதிகமாக தேயிலை கொழுந்தை கொய்து தரும்படி தோட்ட நிர்வாக அதிகாரி வழியுறுத்துகிறார். இதனாலேயே நாங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தோம்” என, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

மேலும், 50 ஹெக்டர் வரையான தேயிலை மலைகள், காடுகளாகி மூடப்பட்டிருப்பதாகவும், ஆண் தொழிலாளர்களை ஒரு நாள் பெயருக்கு 750 கிலோ புற்களை வெட்டி கொம்பஸ்ட் செய்யும் படி வலியுறுத்துவதோடு, வேறு தோட்டங்களுக்கு பணிக்கு செல்லும்படி வலியுறுத்துவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு, பெண் தொழிலாளர்கள் 20 கிலோவுக்கு குறைவாக கொழுந்து பறித்தால், கிலோவுக்கு 40 ரூபா படி வழங்குவதாகவும், தொழிலாளர்களுக்கு முற்பணச் சம்பளம் கொடுப்பதில் இழுபறி நிலை ஏற்படுவதாகவும், தோட்ட நிர்வாகம் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்துக்கொடுக்காமல் அடிமைகளைப் போல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த விடயத்தில் தொழிற்சங்கங்களும், மலையக அரசியல் தலைமைகளும் தலையிட்டு, தீர்க்கமான முடிவினை பெற்றுத்தர வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்