கல்முனையில் இளைஞர் மீது வாள்வெட்டு: பட்டப்பகலில் அட்டகாசம்

🕔 September 23, 2021

– நூருல் ஹுதா உமர் –

ம்பாறை மாவட்டம் – கல்முனை மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள்வெட்டில் காயமடைந்த இளைஞரொருவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை (22) காலை பயணத்தடை அமுலில் உள்ள காலப்பகுதியில் தன்னுடைய வீட்டுக்கு முன்னால் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர்களை நிறுத்தி, வேகமாக வாகனத்தை ஓட்டவேண்டாம் என்று கூறியவர்களுடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், அங்கிருந்து கலைந்து சென்ற பின்னர் மீண்டும் அங்கு கூரிய வாள்களுடன் வந்து, சரமாரியாக தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது காயமடைந்த 19 வயதான முஹம்மத் ஸபான் எனும் இளைஞர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவரின் தந்தை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த எனது தம்பி, சத்தம் கேட்டு வெளியே வந்தபோது மிக நீளமான வாள்களால் தாக்கப்பட்டார். இது தொடர்பில் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம். எனது தம்பியை தாக்கியவர்களை எங்களுக்கு நன்றாக தெரியும். எங்களின் பிரதேசத்தில் யாரிடம் விசாரித்தாலும் அவர்களின் கொடுமைகளை விளக்குவார்கள்” என தாக்கப்பட்ட ஸபானின் சகோதரி ஊடகங்களிடம் கூறினார்.

இந்த சம்பவம் நடந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோவில் மிக குறித்த இருவர் தாக்குதல் நடத்துவதை அவதானிக்க முடிகிறது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணையை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்