‘நெல் பறிமுதல்’ எனும் போர்வையில், வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தை அரசாங்கம் அழிக்கின்றது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

🕔 September 1, 2021

நெல் பறிமுதல் என்னும் போர்வையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கான நடவடிக்கையாக உள்ளது என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரனை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், நாடாளுமன்ற உறுப்பினரையும் சந்தித்துப் பேசினர்.

இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பரம்பரை பரம்பரையாக தாங்கள் விவசாயம் செய்துவரும் நிலையில் நெல்லை சேமித்து அதனை உரிய காலத்தில் பயன்படுத்திவரும் நிலையில் இன்று அந்த நெல்லை பறிமுதல் செய்யும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்துவருவதனால் தாம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டினர்.

அறுவடை செய்யும் நெல்லை உடனடியாக உரிய விலைக்கு விற்பனை செய்யமுடியாத காரணத்தினாலும் அடுத்த விவசாய செய்கைக்கு தேவையான முளைநெல்லுக்காகவும் நெல் சேமித்துவைக்கப்படுவதாகவும் உரிய காலத்தில் நல்ல விலை கிடைக்கும்போது அவற்றினை விற்பனை செய்யவதாகவும் விவசாயிகள் இதன்போது தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவ்வாறு நெல்லை களஞ்சியப்படுத்தி வைக்கமுடியாது என விவசாயிகளின் களஞ்சியங்களை முற்றுகையிடும் நுகர்வோர் அதிகார சபையினர் தெரிவிப்பதோடு, நெல் வைக்கப்பட்டுள்ள இடங்களை சீல் வைப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் விவசாயிகள் கூறினர்.

காலம்காலமாக அறுவடைசெய்யும் நெல்லை களஞ்சியப்படுத்தி வைத்து விதைப்பு நடவடிக்கைகளுக்கு பின்னரே குறித்த நெல்லை விற்பனை செய்வதாகவும் தாங்கள் நெல்லை வியாபார நோக்கில் வாங்கி களஞ்சியப்படுத்தவில்லை எனவும் தங்களது உழைப்பினால் கிடைத்தவற்றையே சேமித்துவைத்திருந்ததாகவும் விவசாயிகள் இதன்போது தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்றஉறுப்பினர் சாணக்கியன்; பாரியளவிலான நெல்லை பதுக்கிவைத்திருக்கும் முதலாளிகளை விட்டுவிட்டு – விவசாயிகள் சேமித்து வைத்துள்ள நெல்லை பறிமுதல் செய்யும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக கூறினார்.

“இலங்கை அரசாங்கம் தனது நிர்வாகத்தினை சரியான முறையில் செய்யாமல் தனது வேலைத்திட்டங்களை பொறுப்பற்ற வகையில் செய்து, இலங்கை பொருளாதாரத்தினை முற்றாக அழித்துக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினையும் அழிக்கும் ஒரு செயற்பாட்டினை ஆரம்பித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்தவரையில் ஒரு ஏக்கரில் 50 தொடக்கம் 60மூடை வரையான நெல்லைப் பெற்றுக்கொள்ளும் நிலையுள்ளது. ஒரு விவசாயி 10 ஏக்கர் விவசாயம் செய்தால் 500 மூடைகள் வரும். சிலவேளைகளில் அண்ணன், தம்பிகள் இணைந்து 100 எக்கர் செய்தால்1000 மூடை வரும்.

அரிசியின் விலையினை அரசாங்கம் குறைக்கவேண்டுமானால் லட்சக்கணக்கான நெல் மூடைகளை பதுக்கிவைத்துள்ள மில் உரிமையாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் நெல்லை பறிமுதல் செய்ய வேண்டும்.

அதனைவிடுத்து வருடக்கணக்காக படிப்படியாக முன்னேறிவந்த அப்பாவி விவசாயிகளின் நெல்லை பறிக்கீன்றீர்கள் என்றால் அது எந்த வகையில் நியாயம்.

இந்த செயற்பாடு வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் ஒரு நடவடிக்கையாகவே நான் பார்க்கின்றேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்