தமக்கு உதவிய ஆப்கானியர்களுக்கு, தமது நாட்டில் வதிவிட உரிமை வழங்கப் போவதாக பிரிட்டன் அறிவிப்பு

🕔 September 1, 2021

ப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் அரசுக்கும் ராணுவத்துக்கும் உதவியவர்கள், பிரிட்டனுக்கு தப்பி வந்திருந்தால், அவர்கள் நிரந்தரமாக அங்கேயே தங்கியிருக்க வதிவிட உரிமை வழங்கப்படும் என்று பிரிட்டன் உள்துறை அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானியர்கள் மறுவாழ்வு மற்றும் ஆதரவுக் கொள்கை திட்டத்தின்படி, கடந்த ஓகஸ்ட் 13ஆம் திகதி தொடக்கம் தற்போது வரை, அந்த நாட்டில் இருந்து 8000க்கும் அதிகமானோரை பிரிட்டன் அரசு மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அங்கு மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் துருப்புகள் கடந்த வாரம் முழுமையாக வெளியேறின. அத்துடன் அந்த நாட்டில் 20 ஆண்டுகளாக முகாமிட்டிருந்த பிரிட்டன் படையின் இருப்பும் முடிவுக்கு வந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டனில் தஞ்சம் அடைந்தவர்கள், தங்களுடைய அரசுக்கும் ராணுவத்துக்கும் உதவியிருந்தால் அவர்கள் தொடர்ந்து பிரிட்டனிலேயே வசிக்கலாம் என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் டோமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

அத்தகைய நபர்கள் எத்தனை பேர் எனும் விவரம் தற்போதைக்கு தன்னிடம் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஆபரேஷன் ‘வோர்ம் வெல்கம்’ என்ற பெயரில் இந்த புனர்வாழ்வுத் திட்டத்துக்கு பிரிட்டன் அரசு பெயரிட்டிருக்கிறது.

பிரிட்டனில் தஞ்சம் அடைந்த ஆப்கானியர்களுக்கு புதிய வாழ்வு அமைவதை உறுதிப்படுத்தப்படுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்