கொவிட் உடல்கள்: ஓட்டமாவடியில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

🕔 March 5, 2021

கொவிட் தொற்று காரணமாக மரணித்தவர்களின் உடல்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரில் உள்ள மஜ்மா நகர் காணியில் நல்லடக்கம் செய்வதற்கான ஒழுங்குகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பான ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக காத்தான்குடி ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேச பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூட்டம் ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். நௌபர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் காத்தான்குடி – ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள், கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேச பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒட்டமாவடி பிரதேச செயலக அதிகாரிகள், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள் சுகாதார அதிகாரிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது கொவிட் தொற்று காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை குறித்த காணியில் அடக்கம் செய்வதற்கான ஒழுங்குகளை அவசரமாக மேற்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, அரசுக்கும் சுகாதார திணைக்களத்துக்கும் ஒத்துழைப்புக்களை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

தற்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 10 கொவிட் உடல்கள் குளிரூட்டிகளிலும் பிரேத அறைகளிலும் உள்ளதாகவும், இவற்றை இன்னும் ஒரு சில தினங்களில் குறித்த காணியில் நல்லடக்கம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.

அதன் அடிப்படையில் குறித்த காணியில் குழுிகள் தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

நேற்று நடைபெற்ற கூட்டம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்