இலங்கை மீதும் ISIS தாக்குதல் நடத்தலாம்; ஞானசார ஆரூடம்

🕔 November 17, 2015
Gnanasara thero - 01லங்கை மீதும் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பு தாக்குதல் மேற்கொள்ளலாம் என்று பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு பொதுபலசேனா அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது பிரான்ஸில் நடந்துவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்கள், விரைவில் கொழும்பில் அல்லது கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களில் இடம் பெறலாம் எனவும் அவர் இதன்போது கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

“மதத்தீவிரவாத கற்கை நெறிகள் முஸ்லிம் மக்களுக்கு போதிக்கப்பட்டு, அவர்களை தீவிரவாதிகளாக்குவதன் பின் விளைவுகளை முஸ்லிம் சமூகம் விரைவில் எதிர்கொள்ள நேரிடும்.

குர்ஆனில் உள்ள இஸ்லாம் சார்ந்த அடிப்படை கோட்பாடுகள், தற்போதைய நடைமுறைக்கு சாத்தியமற்றது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் இலக்கு தற்போது பிரான்சுக்கு அச்சுறுத்தலாகி உள்ளது. இதேபோன்று, விரைவில் இந்த அமைப்பின் இலக்கு இலங்கை பக்கம் திரும்பலாம் என்றஅபாயம் நிலவுகின்றது.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் நாட்டுக்குள் நுழைவதற்கு, தற்போதைய அரசாங்கத்தின் வீசா வழங்கும் புதிய திட்டம் சாதகமாக அமையும்.

தற்போது கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும், குருணாகல், பரகதெனிய, மாவனல்ல மற்றும் மாளிகாவத்தை உள்ளிட்ட பல பிரதேசங்களில் மதரசா என்ற போர்வையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்கள் மத தீவிரவாதத்தை பரப்பி வருகின்றன.

இது எமது நாட்டுக்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக அமையலாம். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினை விடவும் கொடூரமான அமைப்புக்கள், இங்கு உருவாகும் சாத்தியங்கள் உள்ளன.

உலகில் இடம்பெறும் கடும் போக்கு வாதிகளின் தாக்குதல்களை  விமர்சிக்கின்றபொழுது, என்னை இனவாதி என்று பலர் குத்துகின்றனர்.

இது தொடர்பில் சமூக பொறுப்புடன் செயற்படும் முஸ்லிம் தலைவர்களும் மௌனம் சாதித்து வருகின்றனர்.

பொதுவாக எல்லா சமூகத்திலும் கடும்போக்குவாதம் பேசப்படுவது இயல்பு. ஆனால் பொறுப்புமிக்க மதத்தலைவர்கள் தொடர்ந்தும் மௌனம் சாதிக்கும் பட்சத்தில்,அவர்களின் அமைதி போக்கு எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாக அமைந்துவிடக்கூடும்.

இந்நிலையில் தற்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் இளைஞர்கள் பலர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர்.

இவர்கள் தாம் தீவிரவாத அமைப்பில் உள்ளோம் என தமது பெற்றோருக்கும் அறிவிப்பதில்லை. இவர்கள் ‘அல்லாஹ்’ என்று இறைவனின் பெயரை கூறிவிட்டு, எந்த தவறையும்துணிந்து செய்கின்றனர்.

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பிரான்சியர் அல்லாத வேறு இனத்தவர்கள்தான் வாழ்ந்தனர். அதனால்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். இன் தாக்குதலில் அதிகம் அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளனர்.

எனவே எதிர்காலத்திலும் இவ்வாறான தாக்குதல்கள் தொடரும் பட்சத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் மட்டுமல்லாது, முஸ்லிம் சமூகமும் இவ்வாறான நிலைக்கு முகம்கொடுக்க நேரிடும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்