இரண்டரை லட்சம் பேருக்கான கொவிட் மருந்து, நாளை இந்தியாவிலிருந்து வருகிறது: ஏற்றும் பணிகள் வெள்ளி ஆரம்பம்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் கொவிட் தடுப்பு மருந்து, முதல் கட்டமாக – கொவிட் தொற்றுக்கு எதிராக முன்னணியில் நின்று போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஏற்றப்படவுள்ளதாக , ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியுமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்பாக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று அவர் விளக்கமளிக்கும் போதே, இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்;
“முதல் கட்ட நடவடிக்கையின்போது முன்னணி தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கும், ராணுவம் மற்றும் பொலிஸாருக்கும் தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது.
இந்தியாவிலிருந்து நாளை காலை 11 மணிக்கு மேற்படி தடுப்பு மருந்து நாட்டுக்கு வந்திறங்கவுள்ளன.
02 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கான 05 லட்சம் தடுப்பு மருந்துகள் இந்தியாவிடமிருந்து அன்பளிப்பாகக் கிடைக்கவுள்ளன.
கொவிட் தடுப்பு மருந்தை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனாவும் உறுதியளித்துள்ளது” என லலித் வீரதுங்க இதன்போது கூறினார்.
கொவிட் தடுப்பு மருந்தை இலங்கைக்கு வழங்குமாறு ரஷ்யாவிடமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.