தபால் ஊழியர் பணிப் பகிஷ்கரிப்பு
– க. கிஷாந்தன் –
தபால் ஊழியர்கள் 14 கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறையிலான பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணிப் பகிஷ்கரிப்பு இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்கிறது.
இதற்கிணங்க, நுவரெலியா மாவட்டத்தில் பிரதான தபால் நிலையங்கள மற்றும் உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் இன்று வெள்ளிக்கிழமை காலை விநியோகிக்கப்படவிருந்த தபால்கள் நிலையங்களில் தேங்கி கிடப்பதாக தெரியவருகிறது.
இதன் காரணமாக பொது மக்கள் தங்களுடைய கடிதங்களை பெற்றுக்கொள்வதில் பல்வேறுப்பட்ட அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இதேவேளை 14 கோரிக்கைகளையும் நிறைவேற்றாவிட்டால் தொடர்ச்சியாக சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில், பணி பகிஷ்கரிப்பு தொடரும் என தபால் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.