றிசாட் பதியுதீனுக்கு சிறையில் கொரோனா தொற்றும் ஆபத்துள்ளது: ஜனாதிபதி ஆணைக்குழுவில், அவரின் சட்டத்தரணி தெரிவிப்பு

🕔 November 17, 2020

– எம்.எப்.எம். பஸீர் –

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்துள்ளதாக  உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

றிசாட் பதியுதீன் சார்பில் ஆணைக் குழுவில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் இதனை ஆணைக் குழுவுக்கு இன்று செவ்வாய்கிழமை அறிவித்தார்.

தனது சேவை பெறுநரான றிசாட் பதியுதீன் தற்சமயம் தடுத்து வைக்கப்பட்டுள்ள மெகசின் சிரைச்சலையில் ஈ பிரிவில் 10 ஆவது கூண்டுக்கு அருகில் உள்ள 09 ஆவது கூண்டிலிருந்து கொவிட் 19 வைரஸ் தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆணைக் குழுவில் சுட்டிக்காட்டினார்.

குறித்த தொற்றாளர் கந்தக்காடு கொவிட் 19 சிகிச்சை மையத்துக்கு அனுப்பட்டுள்ள போதும், ஈ பிரிவில் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ள 38 சிறைக்கைதிகளில் எவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் கூட முன்னெடுக்கப்பட்வில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராக தனது சேவை பெறுநர் தனிப்பட்ட ரீதியில் விரும்பினாலும், அவர் தற்போதுள்ள சூழலை கருத்தில் கொன்டு அவருக்கு ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக ஆணைக் குழு நடவடிக்கைகளில் தொடர்புபட அனுமதியளிக்க வேண்டும்  என  சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கோரினார்.

ஆயினும் அவ்வாறு ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக தொடர்புபட றிசாட் பதியுதீனுக்கு ஆணைக் குழு சந்தர்ப்பம் அளிக்கவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்