கொரோனாவால் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஆதரவாக, அமைச்சர் சந்திரசேன கருத்து தெரிவிப்பு
கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமளிப்பதை – தான் விரும்புவதாக காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களுக்கும் இருக்கும் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அநுராதபுரத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமளிக்குமாறு முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதேவேளை அரசாங்கத்திடம் நீதியமைச்சர் அலி சப்றி, இது தொடர்பில் விடுத்துள்ள கோரிக்கை குறித்து எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கொரோனா வைரஸ் காரணமாக எவராவது இறக்கும் சந்தர்ப்பத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கோரிக்கை விடுத்தால், அதற்கு அனுமதி வழங்குவதா, இல்லையா என்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட நிபுணர்குழுவின் இறுதி அறிக்கைக்கு அமையவே முடிவு எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.