கொரோனா மரணம்; 40ஆக அதிகரிப்பு
நாட்டில் கொரேனாவினால் மேலும் நால்வர் இறந்துள்ளனர் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
மேற்படி நால்வரில் ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் வசித்து வந்த 51 வயதுடைய நபரொருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 17 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் தொற்றுடன் நிமோனியா நிலைமை ஏற்பட்ட காரணத்தால் இவர் மரணித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் 23 ஆம் திகதி இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொவிட் தொற்று காரணமாக ஏற்பட்ட சுவாச கோளாறு மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
கடந்த 09 ஆம் திகதி கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொவிட் தொற்றுடன் நிமோனியா ஏற்பட்ட காரணத்தால் அவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, 55-60 வயதுக்கு இடைப்பட்ட ஆண் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.
கடந்த 08 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்