இலங்கையில் எங்குமில்லாத நேரக் குறைப்பு; கிண்ணியா வைத்தியசாலைகளில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு, இம்ரான் எம்.பி. கோரிக்கை
கிண்ணியா வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரிடம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதங்களின் மூலம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இக்கடிதங்களின் பிரதிகள் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இக்கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கிண்ணியா தள வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இலங்கையின் வேறு எந்த வைத்தியசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படாத இந்த நேரக்குறைப்பை நிறுத்தி, வழமைபோன்று வெளி நோயளர் பிரிவு செயற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல நடுஊற்று வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலமாக வைத்தியர் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் இவ்வைத்தியசாலையை சூழவுள்ள கிராமங்களிலுள்ள பொதுமக்கள் வைத்திய சேவைக்காக மிகவும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே தற்போதைய சூழ்நிலையில் இவ்வைத்தியசாலைக்கு பகுதி நேர அடிப்படையிலாவது, வைத்தியர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறே நடுத்தீவு வைத்தியசாலைக்கும் நிரந்தர வைத்திய நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.