சொறிக் கல்முனை பகுதியில் மனிதத் தலை மீட்பு

🕔 August 10, 2020

பாறுக் ஷிஹான்

ம்பாறை மாவட்டம் சொறிக்கல்முனை பகுதியில் மனிதத் தலையொன்று மீட்கப்பட்டுள்ளது.

சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது, முதலை இழுத்துச்சென்றவரின் தலை இதுவென தெரிவிக்கப்படுகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தத் தலை மீட்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை வழமை போன்று மாடுகளை பார்ப்பதற்காக குறித்த நபர் வழுக்கைமடு நீர்க்கால்வாய் அருகில் சென்றுள்ளார்.

பின்னர் தனது உடுதுணிகளை நீர்க்கால்வாய் அருகில் வைத்துவிட்டு கால்வாயில் இறங்கி குளித்துள்ளார். இதன்போதே குறித்த நபரை கால்வாயில் இருந்த முதலைகள் இழுத்துச்சென்றுள்ளதாகக் தெரியவருகிறது.

இவ்வாறு இழுத்தச்சென்றவரை காணவில்லை என குடும்பத்தவர்கள் தெரிவித்த நிலையில், கிராமத்தவர்களின் உதவியுடன் தேடப்பட்டது. இதன் போது காணாமல் போனவரின் ஆடைகள் கால்வாய் கரையோரத்தில் இருந்து மீட்கப்பட்டது.

பின்னர் சுமார் 800 மீற்றர் தொலைவில் குறித்த கால்வாயில் மிதந்து வந்த நிலையில் தலை மீட்கப்பட்டது. பின்னர் மீட்கப்பட்ட தலை கரைக்கு கொண்டுவரப்பட்டு சவளக்கடை  பொலிஸாரினால்  விசாரணைகள் இடம்பெற்றன.

இவ்வாறு இடம்பெற்ற விசாரணை அடிப்படையில் அந்தத் தலை அப்பகுதியை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க றோக்கு ஜோசப் என அவரின் சகோதரி அடையாளம் காட்டியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின்  உத்தரவிற்காக தலை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்