கொரோனாவினால் மரணிப்போரை அடக்கம் செய்யும் உரிமையை வழங்கக் கோரி: றிசாட் பதியுதீன் தலைமையில் மனு

🕔 May 14, 2020

கொவிட் – 19 (கொரோனாா) வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டுமென, கடந்த ஏப்ரல் 11ஆம் திகதியிடப்பட்டு, சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி வெளியிட்ட 2170/08 எனும் வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக் கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் உட்பட – அக்கட்சியின் தவிசாளர் அமீர் அலி, தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பொருளாளர் ஹுசைன் பைலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசா ஊடாக இந்த மனு, இன்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர், இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

குறித்த மனுவில்;

‘இலங்கையில் நடைமுறையில் இருந்துவரும் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்புக்கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், தொற்று நோய்களால் மரணிப்பவர்களின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடும் இருந்த நிலையிலேயே, கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்ய வேண்டுமென, திருத்தியமைக்கப்பட்ட வர்த்தமானியின் மூலம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்புக் கட்டளைச் சட்டம், வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் திருத்தப்பட்டமையை வலுவிழக்கச் செய்து, கொவிட் – 19 வைரஸினால் உயிரிழப்பவர்களை புதைக்கவோ அல்லது தகனம் செய்யவோ முடியுமென மீளத் திருத்தி வெளியிட உத்தரவிட வேண்டும்’ என, மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

மரணித்த உடலை அடக்குவதை விட எரித்தலானது வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் என்று, விஞ்ஞான ரீதியான எந்தச் சான்றுகளும் இல்லை என்பதையும், உலகத்தில் மில்லியன் கணக்கானோருக்கு கொவிட் – 19 வைரஸ் பரவியிருக்கும் சூழ்நிலையிலும், உயிரிழந்த லட்சத்துக்கும் மேற்பட்டவர்களில், ஆயிரக்கணக்கானோரின் உடல்கள் பல நாடுகளில் அடக்கப்பட்டிருப்பதையும் மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், கொவிட் 19 நோயால் இறந்து – அடக்கம் செய்யப்பட்டவர்களின் உடல்களிலிருந்து நோய் பரவியதாக உலகில் ஓர் அறிக்கையேனும் இல்லையெனவும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருப்பதோடு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இடைக்கால வழிகாட்டலில், எரிக்கவும் – அடக்கவுமான இரண்டு தேர்வுகள் உள்ளனை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்

எனவே, இவற்றை வலுவான காரணங்களாக ஏற்று, நீதி வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

Comments

புதிது பேஸ்புக் பக்கம்