கதவைத் தட்டும் ஹில்மி அஹமட்; காசு பெறாத சுமந்திரன்

🕔 May 11, 2020

– முகம்மது தம்பி மரைக்கார் –

கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராகவும், அவ்வாறு மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை அனுமதிக்குமாறு உத்தரவிடக் கோரியும், உச்ச நீதிமன்றில் ஹில்மி அஹமட் என்பவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அக்குரணையை பிறந்தகமாகக் கொண்ட இவர், ‘யங் ஏசியா’ எனும் ஊடக நிறுவனமொன்றினை நீண்ட காலமாக நடத்தி வந்தவர்; சமூக ஆர்வலர்.

தனது சமூகத்துக்கு எதிராக நடக்கும் மேற்படி அநீதியைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில்; தனி நபராக – குறித்த அடிப்படை மீறல் மனுவை அவர் தாக்கல் செய்திருக்கிறார்.

அவருடன் நாம் பேசினோம்.

“தனி நபராகவே இந்த மனுவை நான் தாக்கல் செய்துள்ளேன். கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக கையளிக்க வேண்டும் என, அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருக்கின்றேன்” என்றார்.

தான் மேற்கொண்டுள்ள இந்த செயற்பாட்டுக்காக, எந்தவொரு அரசியல்வாதியும் எதுவித உதவிகளையும் தனக்கு வழங்கவில்லை என்பதையும் நம்மிடம் ஹில்மி அஹமட் உறுதிபடத் தெரிவித்தார். 

சுமந்திரனின் பேருதவி

“இந்த மனுவைத் தாக்கல் செய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் அவர்களைச் சந்தித்துப் பேசினேன். இந்த வழக்கில் அவர் ஆஜரானால் அதற்காக சிறியதொரு பணத் தொகையை வழங்கும் எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால், கொடுப்பனவு குறித்து நான் பேசுவதற்கு முன்பாகவே, இந்த வழக்கில் தான் எதுவித ஊதியத்தையும் பெறாமல் இலவசமாக ஆஜராவதாக சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் கூறினார்”.

“சுமந்திரன் அவர்களின் இந்த உதவி மிகப் பெறுமதியானதாகும். மேலும், இந்த வழக்கில் தன்னுடன் ஆஜராகும் தனது உதவியாளர்களான சட்டத்தரணிகளுக்கும் எதுவித கொடுப்பனவுகளையும் வழங்கத் தேவையில்லை என்றும் சுமந்திரன் என்னிடம் கூறியிருக்கிறார்” எனவும் ஹில்மி அஹமட் தெரிவித்தார்.

ஹில்மியின் உறுதி

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான சட்ட அனுமதியைப் பெறுவதற்காக, நீதிமன்றின் கதவுகளைத் தட்டிப் பார்த்தே ஆக வேண்டும் என்பதில் ஹில்மி அஹமட் மிகவும் உறுதியாக இருக்கின்றார்.

இந்த செயற்பாட்டில் அவரை உற்சாகமிழக்கச் செய்யும் வகையில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலரால் அவருக்குக் கூறப்பட்ட ‘ஆலோசனை’கள் எவற்றினையும் அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்பதை அவருடன் பேசும் போது புரிந்து கொள்ள முடிந்தது.  

ஹில்மி அஹமட் எடுத்துள்ள இந்த நடவடிக்கையானது, முஸ்லிம் அரசியல்வாதிகள் பலருக்கு தற்போது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

“ஹில்மி அஹமட் எனும் ஒரு தனிநபர், தனது சமூகத்தின் உரிமைக்காக நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனு மீதான வழக்கில் – சகோதர சமூகத்தைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் எவ்விதக் கட்டணங்களையும் பெறாமல் ஆஜராகுவதற்குச் சம்மதித்திருக்கிறார். ஆனால், முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நீங்களெல்லாம் வாய்மூடி கிடக்கிறீர்களே, வெட்கமில்லையா உங்களுக்கு” என்று கேட்டு, முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது – முஸ்லிம் சமூகம் காறி உமிழும் நிலையொன்றும் ஏற்படலாம்.

அதிலிருந்து தப்பிப்பதற்காக சிலவேளை, முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை எதிர்வரும் நாட்களில் நாடக் கூடும்.

நன்றி: தமிழ் மிரர் (12 மே 2020)

இந்தக் கட்டுரையை முழுமையாக விளங்கிக் கொள்ள, இதையும் படியுங்கள்: சாம்பலில் இருந்து எழும் குரல்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்