நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆயுர்வேத மருந்து, ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு வழங்கி வைப்பு
🕔 April 14, 2020
– பாறுக் ஷிஹான் –
கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு, ஒலுவில் துறைமுகத்தின் ஒரு பகுதியில் கடற்படையினரால் பராமரிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் நிலையத்தின் வைத்திய பொறுப்பதிகாரியிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய ஒரு தொகுதி ஆயுர்வேத மருந்து வகைகள் இன்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் இத்தனிமைப்படுத்தல் நிலையத்துக்குச் சென்று, ஆயுர்வேத மருந்து வகைகளைகளுடன், பராமரிப்பாளர் அங்கிகள் மற்றும் முகக்கச கண்ணாடிகள் உள்ளிட்டவற்றினையும் கையளித்தனர்.
மேலும் தனிப்படுத்தல் முகாம் பராமரிக்கப்படுகின்ற நிலைமைகளையும் வைத்திய பொறுப்பதிகாரியிடம் கேட்டறிந்து கொண்டனர்.
அத்துடன் குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தை, கடற்படையினருடன் இணைந்து எவ்வாறு பராமரிப்பது என்பது தொடர்பாக பலதரப்பட்ட தீர்மானங்கள் இதன் போது எடுக்கப்பட்டது
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு. சுகுணனுடன் கல்முனை பிராந்திய சுதேச வைத்திய துறைக்கான இணைப்பாளர் டொக்டர் எம்.ஏ. நபீல் உள்ளிட்டோரும் இதன்போது அங்கு சென்றிருந்தனர்.