‘அன்னத்தை’ தருவதென்றால், கொழும்பில் சஜித் போட்டியிடக் கூடாது: ரவி நிபந்தனை விடுத்ததாக மனோ தெரிவிப்பு

🕔 March 6, 2020

ஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் செயலாளராக தன்னை அல்லது தான் சொல்பவரை நியமித்தால், அன்னம் சின்னத்தை குறித்த கூட்டணிக்காக வழங்க முடியும் என்று ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணா நாயக்க நிபந்தனை விதித்ததாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஆயினும், அந்த நிபந்தனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து “அன்னப்பறவை சின்னத்தை தருகிறேன், சஜித் பிரேமதாஸ கொழும்பில் போட்டியிடக்கூடாது” என மீண்டும் ஒரு நிபந்தனையை ரவி கருணா விதித்தார். அதுவும் நிராகரிக்கப்பட்டு விட்டது என்றும், மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது;

‘விஷயம் என்னவென்றால், இதுவெல்லாம் இன்று டூ லேட், ப்ரதர். நாங்கள் கடந்த முறை போல் எவருக்காகவும் காத்திருந்து ஏமாற தயாரில்லை. ஒரு குழு ஐதேகவுடன் பேச்சுகளை நடத்துகின்ற அதேவேளை இன்னொரு குழு தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டது.

மிக அதிக வாக்காளர்கள் இருக்கும் மாவட்டத்தில் சஜித் போட்டியிட்டால், அது சிங்கள வாக்குகளை இழுத்து எடுக்க உதவும். கொழும்புடன் சஜித்துக்கு பூர்வீக தொடர்பும் இருப்பதால் அவர் கொழும்பில் போட்டியிடவேண்டும் என கடந்த மாதமே தீர்மானித்து விட்டோம்.

எனவே இப்போது வந்து எவரும் குறுக்கே, நெடுக்கே ஓட முடியாது. சும்மா, நிபந்தனை போட்டு, சிறுவர்களை வைத்துக்கொண்டு, சிரிப்பு காட்ட வேண்டாம்.

முழு ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களும், பங்காளி கட்சிகளும் இங்கேதான் இருக்கிறோம். இன்னமும் பல புது கட்சிகாரர்களும் வருகிறார்கள். வந்து சேருங்கள். கதவு மூட முன் வந்து சேருங்கள். எல்லோரும் ஒன்றாய் முன்னோக்கி போவோம். இதுதான் எம் செய்தி’.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்