ஒரு கையால் கொடுத்து விட்டு, மறு கையால் பறிப்பது, மக்களை அவமானப்படுத்தும் செயல்: சாய்ந்தமருது தொடர்பில் மனோ கணேசன்

🕔 February 20, 2020

சாய்ந்தமருது நகரசபையை அங்கீகரித்து வர்த்தமானி பிரகடனம் செய்து, சாய்ந்தமருது மக்களை பட்டாசு கொளுத்தி, பாற்சோறு பகிர்ந்து கொண்டாட வைத்துவிட்டு, சில தினங்களில் அதை இடை நிறுத்த அமைச்சரவையில் தீர்மானித்திருப்பது அந்த ஊர் மக்களை அவமானப்படுத்தும் அகோரமான செயல் என்று முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலாக, அந்த நகர சபையை இப்படி அவசரப்பட்டு கொடுக்காமலேயே இருந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள குறிப்பிலேயே, மனோ கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘இந்த இடை நிறுத்தலுக்கு உள்ளே இனவாத ஓட்டம் இருப்பது நன்கு புலனாகிறது. பல ஆளும் கட்சி அரசியல்வாதிகளும், அரசாங்கம் சார்ந்த பெளத்த துறவிகள் சிலரும் கச்சை கட்டிக்கொண்டு; ‘இதை ஏன் செய்தீர்கள்’ என அரசு தலைவரை மொய்த்தது எங்களுக்கு தெரியும்.

அதேபோல் ஐ.தே.கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் முட்டாள்தனமான கருத்துகளை வெளியிட்டார்கள். இவர்களை நேரில் அழைத்து இப்படி பேசாதீர்கள் என நான் கூறினேன்.

எது எப்படி இருந்தாலும், ஒரு அரசாங்கம் என்கின்ற போது அதற்கு பொறுப்பு அதிகம். ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என அரசாங்கம் காரியமாற்ற முடியாது. “தமிழர்களும் முஸ்லிம்களும் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. எனவே அவர்களை நாம் கணக்கில் எடுக்க மாட்டோம்” என இந்த அரசாங்கம் கூறமுடியாது.

யார் வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும், பதவிக்கு வந்தவுடன் – அது நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசாங்கம்தான். அப்படித்தானே, சுதந்திர தின உரையில் ஜனாதிபதி சொன்னார் என, பல திடீர் தேசபக்தர்கள் குதூகலமாக சொல்லி கொண்டாடினார்கள்.

இதன்மூலம் இந்த அரசாங்கம் ஒரு சிங்கள பெளத்த அரச நிறுவனம் மட்டுமே என மீண்டும் ஊர்ஜிதம் ஆகியுள்ளது. நான் இருந்த அரசாங்கம் அல்லது நமது கூட்டணி ரொம்ப சுத்தமானது என நான் சொல்ல வரவில்லை. ஆனால், கேள்வி கேட்கும் சுதந்திரம் இங்கே இருக்கிறது என்பது கேள்வி கேட்கும் முதுகெலும்புள்ள எனக்கு நன்கு தெரியும்.

இதனால்தான் தம்மை மாற்றிக்கொள்ளாத வரைக்கும் இத்தகைய பெரும் இனவாதிகளுடன் எனக்கு எப்போதும் ‘செட்’ ஆவதில்லை.

இந்த அரசாங்கத்துக்கு இனியும் வெள்ளை அடிக்கும் சிறுபான்மை மேதாவிகளுக்குதான் இது வெளிச்சம். இதற்கும் ஒரு நகைச்சுவை காரணத்தை கண்டு பிடித்து சொல்லுங்கள்.

இந்த இனவாத, அரசியல் சித்து விளையாட்டில் அப்பாவி சாய்ந்தமருதூர் மக்களின் சந்தோசம் தொலைந்து போனது. இதையிட்டு மனம் வருந்துகிறேன்.

அதேபோல் நல்லவேளை நுவரேலியா மாவட்டத்தின் புதிய 06 உள்ளுராட்சி மன்றங்களை விட்டுக்கொடுக்காமல், தடைகளை மீறி அப்போதே செய்து முடித்தோம் என நிம்மதியடைகிறேன்.

“இந்த நாடு நம்ம நாடு இல்லை” என்ற எண்ணம் சிறுபான்மை மக்களுக்கு ஏற்படா வண்ணம் ஆட்சி செய்பவர்தான், உண்மையான தலைவன் அல்லது தலைவி ஆவார். அப்படிதான் நெல்சன் மண்டேலா, லீ குவான் யிவ் ஆகியோர் தம் நாடுகளை ஆண்டார்கள்.

இங்கே தலைவர் இல்லை. தேர்தல் அரசியல்வாதிகள்தான் இருக்கிறார்கள்’ எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்