வெள்ளை வான் கடத்தல்; அம்பலமாகும் உண்மைகள்

🕔 October 13, 2015
Whit van - 01முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் இயக்கப்பட்ட வெள்ளை வான் கடத்தலுக்காக, 03 குழுக்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக, ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த மூன்று குழுக்களில் முதல் குழுவானது, கடத்தி செல்லப்படும் நபர் தொடர்பில் தகவல் சேகரித்தல் மற்றும் புலனாய்வு செய்து கடத்தி செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டன.

அதற்காக, பாதுகாப்பு புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் மற்றும் விடுதலை புலிகளில் இருந்து வெளியேறிய உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டாவது குழுவானது, வெள்ளை வான்களில் கடத்தலை மேற்கொள்கின்ற குழுவாகும். அதிகமான சந்தர்ப்பங்களில் இதற்காக இரண்டு குழுக்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இக்குழுக்களில் ஒன்று கருணா அம்மானின்  குழுவாகும். மற்றய குழு அவ்வப்போது மாற்றப்படும்.

விசேட அதிரடிப்படையில் கோத்தபாயவின் சார்பு அணி மற்றும் பாதுகாப்பு படைகளில் தெரிவு செய்யப்பட்ட ஒரு குழுவும் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உதாரணமாக கொழும்பு கோட்டையில் வைத்து செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் கருணா அம்மானின் கொலைகார குழுவினால் கடத்தப்பட்டுள்ள நிலையில், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கோத்தபாய தரப்பு குழுவினரால் கடத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

மூன்றாவது குழுவானது, கடத்திச் செல்லப்படுபவர்களினால் விட்டு செல்லப்படும் சாட்சிகளை அழிக்கும் குழுவாகும்.

அவர்கள் கோத்தபாயவின் புலனாய்வு பிரிவினைச் சேர்ந்தவர்களாவர். அத்துடன் இவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் போல் நடித்துள்ளனர்.

கடத்தல் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த இவர்கள் தற்செயலாக கடத்தலின் போது உயிர் பிழைத்தவர்கள் விட்டுச் சென்ற சான்றுகளை , சிவில் அமைப்பினர் அல்லது பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து, தம் வசப்படுத்திக் கொண்டுபோய், அழித்து விடும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவாகும். இதனால் பல கடத்தல் தொடர்பில் எவ்வித சாட்சிகளும் மீதமாகவில்லை.

எப்படியிருப்பினும் கடத்தி சென்ற நபர்களை கொலை செய்தல் மற்றும் உடல்களை அழிக்கும் நடவடிக்கையினை இரண்டாவது குழுவான கடத்தல் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடிப்படையினரை ஈடுபடுத்தி மேற்கொள்ளப்பட்ட கடத்தல் மற்றும் கொலைகளுக்கு பின்னர், சடலங்கள் கொழும்புக்கு தொலைவில் அமைந்துள்ள காட்டு பிரதேசம் ஒன்றில் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருணா அம்மானின் குழுவினால் கடத்தப்பட்ட நபர்களின் சடலங்களின் தலை, வயிறு பகுதிகள் கடலில் மூழ்கடிக்கும் நடவடிக்கைகள் கருணா அம்மானின் குழுவினால்மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிடைக்கப்பட்டுள்ள தகவல்களுக்கமைய, தெற்கில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளை வான் கடத்தல் மற்றும் கொலை தொடர்பில் முக்கிய பல விடயங்கள் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் கோத்தபாய ராஜபக்சவின் வலது கை என அழைக்கப்படும் நபர் கைது செய்யப்படவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்